Skip to main content

ஒரே நாளில் ரூபாய் 252.48 கோடிக்கு மது விற்பனை!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

tasmac shops liquor sales rs 252 crores oneday sale

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. 

 

இருப்பினும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள். இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு நேற்று (24/04/2021) அறிவித்திருந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (26/04/2021) அதிகாலை 04.00 மணி முதல் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், இன்று (25/04/2021) முழு ஊரடங்கு என்பதால், மதுப்பிரியர்கள் நேற்று (24/04/2021) டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது பானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் தமிழகத்தில் நேற்று (24/04/2021) ஒரே நாளில் ரூபாய் 252.48 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மணடலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 58.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, மதுரை மண்டலத்தில் ரூபாய் 49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 48.57 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 47.79 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 48.32 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.