Skip to main content

'மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

tamilnadu three districts heavy rains regional meteorological centre

தமிழத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிதமான மழையும், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 

 

நாளை (11/01/2021) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

நாளை மறுநாள் (12/01/2021) திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

 

ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), திருவாடனை (இராமநாதபுரம்) தலா 7 செ.மீ., ஆர்.எஸ்.மங்களம் (இராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 6 செ.மீ., சாத்தான்குளம் (தூத்துக்குடி), தொண்டி (இராமநாதபுரம்) தலா 5 செ.மீ., வட்டணம் (இராமநாதபுரம்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஏர்போர்ட் பீளமேடு (கோவை) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 

ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 14- ஆம் தேதி முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி 12- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்