கரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு, ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் ஃபார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும்போது, ரூ.510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘இது போதுமானதாக இருக்காது, கரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்ததுடன் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும், ‘கரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அதன்மூலம், அரசால் கட்டாயப்படுத்தப்படுவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வரச்சொல்வது போன்று சிறுவன் பேசுவதை அனுமதிக்க முடியாது. 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்களது நிறுவனங்களின் தகவலைப் பெற்று உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.