Skip to main content

வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் கொச்சையான  காட்சி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: வேல்முருகன்

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

T. Velmurugan



வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் கொச்சையான  காட்சி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழி, மனித உயிருக்கும் மேலானது. எப்படியென்றால், உயிர் போய்விடும், மொழி போகாது, இருக்கும். இந்தப் பேரண்டத்தை மாத்திரமல்ல; அதற்கு மேலும் ஏதேனும் உண்டா என்பதைக் கூட கணிக்க வல்லது மூளையல்ல, மொழிதான். உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. அத்தனை மொழிகளிலும் விலையேறப்பெற்ற, முதன்மையான ஒரு சொல் உண்டென்றால் அது “விடுதலை”தான். ஏனென்றால் அது மனிதர்களுக்கு அவசியமான சொல். அதன் அதாவது மானுட விடுதலையின் முழுமுதற் குறியீடாய்த் திகழ்பவர்தான் எம் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்!

 

 

அவர் பெயரில் கொச்சையான ஒரு காட்சி வைக்கப்பட்டு வெளிவந்துள்ளது, அவசியமுண்ட் (Varane Avashyamund) எனும் மலையாளத் திரைப்படம். மரியாதைக்குரிய நடிகர் மமூட்டியின் மகன் மரியாதைக்குரிய துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவர் “இந்தக் காட்சி தெரியாமல்தான் இடம்பெற்றுவிட்டது. கேரளாவில் அது பொதுப்பெயர் கூட” என்று முரண்பட்ட பதிலைச் சொல்லியிருக்கிறார்.
 

தெரியாமல் இடம்பெற்றுவிட்டது என்றால் அந்தக் காட்சியை அகற்ற வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை?
 

ஒருவேளை அவர் அந்தப் படத்தில் நடித்தாரே தவிர, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாம் இருக்கும்போது, தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பாரானால், அவர்கள் கவனத்திற்கு இதைக் கொண்டுபோவதற்கென்ன?
 

நாங்கள் அந்தப் படக் குழுவினரின் மேல்மட்டத்தினருக்குச் சொல்லிக்கொள்கிறோம்: ஒரு திரைப்படம் தயாரிப்பது என்றால் தனிமனிதர், சமூகம், நாடு, உலகம், இப்பேரண்டம் இவை குறித்தெல்லாம் மேலோட்டமாகவாவது தெரிந்திராமல் எப்படி? தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்போதோ வாழ்ந்த மனிதரா தங்களுக்குத் தெரியாமலிருப்பதற்கு?
 

கல்விச் சிறந்த தமிழ்நாடு என்று கவிதை இருந்தாலும், இந்தியாவில் கல்வியில் சிறந்த முதல் மாநிலம் கேரளாதானே! அப்படிப்பட்ட கேரளர்களுக்கு பிரபாகரன் என்பது தனிப் பெயர் அல்லாமல் பொதுப் பெயர் என்றால் தங்களின் பந்தபாச சகோதரர்களாகிய தமிழர்கள் யாம் அதை எப்படி நம்புவது?
 

மதிப்பிற்குரிய நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் இது குறித்து பொதுவெளியில் மன்னிப்புக் கோரியிருப்பது நாகரிகமானதே! அதைத் தமிழர்களாகிய நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். தவறு அவர் மீது இல்லை என்பதையும் நாங்கள் நன்கறிவோம். ஆனாலும் படத்தின் நாயகன் என்ற முறையில் அந்தக் காட்சியை அகற்ற தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாமே! எனவே உடனடியாக அந்தக் காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

 

ிு

படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இதில் மவுனமாக இருப்பது சரியில்லை. இதில் முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான். உடனடியாக அந்தக் காட்சியை அப்புறப்படுத்துங்கள்; இல்லாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
 

மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறோம் - திரைப்படம் என்பது வெறும் படம் மாத்திரமே அல்ல; அது சமூக வாழ்வை, ஏன் உலக வாழ்வையே புடம் இடுவதாகும்!
 

சமூக-உலக வாழ்வுக்கு முரணான ஒரே ஒரு காட்சி இடம் பெற்றால் கூட அது நிறைகுடத்தில் துளி விடம் என்றே ஆகும்! அப்படியான படம்தான், வரனே அவசியமுண்ட்!
 

இதில் மானுட விடுதலையின் குறியீடாம் எம் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரில் கொச்சையான  காட்சி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! அதனை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்