அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பணியாற்றிய பொழுது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கணக்கு தணிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பணியாளர்களை நியமிப்பதில் முறைகேடு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு, மதிப்பெண்களை அச்சிடுவதில் முறைகேடு என சூரப்பா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் கணக்குத் தணிக்கை குழு, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.