கொடைக்கானல் படகு குழாமில் மறு உத்தரவு வரும் வரை படகுகளை இயக்குவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
![Seal to Kodaikanal Boat Club! Prohibition of private boat riding in the lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/4H9dL28nLwuQTSS-2rnGGrOpnpePW6rzPLosFqhdQbc/1572975386/sites/default/files/inline-images/madurai%20high%20court%20branch%20%281%29.jpg)
கொடைக்கானல் - சீனிவாச புரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘கொடைக்கானலின் மையப்பகுதி, இயற்கை தந்த வரமாக எரியாக அமைந்துள்ளது. இந்த ஏரி, முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமானதாகும். ஏரி அமைந்துள்ள பகுதியில், 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் கிளப்பிற்கு ஒத்திக்காக விடப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிளப், பத்தாயிரம் சதுர அடிக்கும் மேலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, அப்பகுதியில் படகு குழாம், கடைகள், கழிப்பறை போன்றவற்றைக் கட்டி வணிக நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. மேலும், செப்டம்பர் 1 -ஆம் தேதியுடன் (01.09 2019 ) இந்தப் படகு குழாமின் ஒப்பந்த காலம் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், சட்ட விரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது.
![Seal to Kodaikanal Boat Club! Prohibition of private boat riding in the lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/0HiFEC59VJym0senY1bE7mMr_owJWOgdkz7dg8bCzSk/1572975405/sites/default/files/inline-images/kodaikanal%20padaku%20pokuvarathu.jpg)
இங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படும் நிலையில், இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகு களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய், கொடைக்கானல் நகராட்சி மற்றும் மீன்வளத்துறைக்கு 90:10 என்ற விகிதத்தில் சென்று சேர வேண்டும். ஆனால், இந்த வருவாய் முழுவதும் தற்போது தனியாருக்குச் சென்று விடுகிறது. இதேபோல், ஏரி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகமும், ஏரியை வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. இவற்றைத் தடுக்கும் வகையிலும், இந்தப் படகு குழாம் மூலம் வரும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையிலும் செய்வதற்கு பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் படகு குழாமில் படகு போக்குவரத்துக்குத் தடை விதித்ததோடு, போட் கிளப்பை பூட்டி சீல் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.