Skip to main content

ஏழு தமிழர்கள், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை 

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
tn


 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் எப்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதேப்போன்று, ஏழு தமிழர்களும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையையும் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியன் ஆகிய மூன்று பேரும் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட நிலையில், கருணை அடிப்படையில் கவர்னரின் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் தாங்கள் செய்த குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறையில் தண்டனையை அனுபவித்து உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கருணை அடிப்படையில் கவர்னரின் ஒப்புதலோடும், மாநில அரசின் பரிந்துரையோடும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

ஆனால், இதேப்போன்று விடுதலையாவதற்குண்டான அனைத்து தகுதிகளையும் உடைய, பேரறிவாளன், முருகன் உட்பட ஏழு தமிழர்களின் விடுதலை மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்படுகிறது.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டிய பிறகும், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் விடுதலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 

அதேபோல் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையும் கவர்னர் தலையீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி, அனைத்து மனித உரிமை அமைப்புகள், அவர்களின் குடும்பங்கள், தொடர்ந்து போராட்டங்களையும், கோரிக்கைகளையும் வைத்துவரும் நிலையில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக விடுதலை மறுக்கப்பட்டு வருகின்றது.
 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர்கள் என்பதற்காக விடுதலைக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாநில அமைச்சரவையின் முடிவையும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையையும் கிடப்பில் போட்டு விடுதலையை மறுக்கும் பாரபட்ச போக்கை கவர்னர் கைவிட வேண்டும். 
 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் எப்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதேப்போன்று, ஏழு தமிழர்களும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையையும் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாநிலக் குழுவுக்கு அதிகாரம்; எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
SDPI State Executive Committee to empower state committee to form alliance in parliamentary elections

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று(12.2.2024) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநிலச் செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது, தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.