Skip to main content

சசிகலாவின் 300 கோடி ரூபாய் சொத்து முடக்கம்... பினாமி தடுப்புப் பிரிவு அதிரடி!! 

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

Sasikala's property worth Rs 300 crore frozen

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பினாமி பெயரில் வாங்கிய 65 சொத்துகளை வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு முடக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வாங்கப்பட்ட 65 சொத்துகள் 200 ஏக்கரில் பரவியிருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு 300 கோடி ரூபாயாகும். ஸ்ரீ ஹரிச்சந்தனா  என்ற நிறுவனத்தின் ஷெல் கம்பெனி மூலமாக இந்தச் சொத்துகள் வாங்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. எந்தவித பணப் பரிமாற்றமும் நடைபெறாத அந்த கம்பெனியில், சசிகலா 1,600 கோடி ரூபாய்க்கு பினாமி பரிவர்த்தனை செய்து இருக்கிறார் என்றும், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் மீது நடைபெற்ற விசாரணை அடிப்படையில் ஷெல் கம்பெனியின் மூலம் பணத்தை முதலீடு செய்து சசிகலா சொத்துகளை வாங்கி இருப்பதாகவும், குறிப்பாக போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் உட்பட 65 சொத்துகளை வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்