சேலம் அருகே, ரவுடி காட்டூர் ஆனந்தனை கொடூரமான முறையில் கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளிகள் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் என்கிற ஆனந்தன் (வயது 44). ரவுடியான இவரை கடந்த 5 ம் தேதி இரவு, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காட்டூரைச் சேர்ந்த ரவுடி அன்பழகன், கூட்டாளிகள் சக்திவேல், மணிகண்டன், அஜித்குமார் ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களுடைய கூட்டாளிகளான ராஜா, சீனிவாசன், ஹரி சிவன், குழந்தைவேல் ஆகிய நான்கு பேரை காரிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த நான்கு பேரையும் காவல்துறையினர் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் நான்கு பேரும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களை காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அன்பழகன் அளித்த வாக்குமூலத்தில், ''நானும், இன்னும் சிலரும் காட்டூர் ஆனந்தனிடம் தான் வேலை செய்து வந்தோம். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் என அவர் ஈடுபட்டு வந்த அனைத்து சம்பவங்களிலும் உடன் இருந்தோம். சமீப காலமாக காட்டூர் ஆனந்தன் அரசியல் பக்கம் ஆர்வம் காட்டியதால், கட்டப்பஞ்சாயத்து செய்வதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில், வலசையூரில் உள்ள ஒரு பேக்கரியில் நான் மாமூல் கேட்டு மிரட்டினேன். இதை அறிந்த காட்டூர் ஆனந்தன் என்னைக் கண்டித்தார். அவர் அரசியல் பக்கம் சென்று விட்டதால் அவருடைய இடத்திற்கு நான் வர வ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் ஆனந்தன் இருக்கும் வரை முன்னுக்கு வர முடியாது. அதனால், அவரை போட்டுத்தள்ள முடிவு செய்து, நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினேன்,'' என காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். மற்றொரு ரவுடியான சக்திவேல் அளித்த வாக்குமூலத்தில், ''நான் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு வலசையூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தேன். இதைப் பார்த்த ஆனந்தன், ஒரு நாள் என்னை வழிமறித்து, இனிமேல் இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது என்று எச்சரித்தார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அன்பழகனுடன் சேர்ந்து கொண்டு அவரை திட்டமிட்டு கொன்றோம்'' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சம்பவத்தின்போது, ஆனந்தனை வழிமறித்து கத்தியால் வெட்டியதும் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த மயக்க ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனால் கொலை வெறியுடன் இருந்த கும்பல், அவரை விடாமல் துரத்தி சென்று கழுத்து, தலையில் வெட்டி கொன்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து நான்கு பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.