Skip to main content

சேலத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க அலைமோதிய மக்கள்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

சேலத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கம் கொண்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து, விநியோகத்தையும் தொடங்கி வைத்து இருந்தது.


இதற்கிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

salem district ration shops pongal gift peoples


இந்நிலையில் மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை (ஜன. 9) ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடங்கியது. 


சேலத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்குவதற்காக கார்டுதாரர்கள் காலை 07.30 மணி முதலே ரேஷன் கடைகள் முன்பு கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிய ரேஷன் ஊழியர்கள், டோக்கன் விநியோகம் செய்தனர். 


சில பகுதிகளில், தெரு வாரியாக பெயர்கள் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாள்களில் வந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும்படி அறிவித்தனர். சேலம் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை இந்த முறை பின்பற்றப்பட்ட நிலையில், திடீரென்று மாலை நேரம் ஆக ஆக, அந்த விதியை தளர்த்தினர்.


இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ''எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு நிச்சயமாக கிடைக்கும். ஆனால் இடையில் யாராவது நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு பெற்று விடுவார்களோ என்ற அச்சமும், எங்கே நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தாலும்தான் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தி, பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை சீராக வழங்கி வருகிறோம். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக அனைத்து கடைகளும் வார விடுமுறைகளின்றி செயல்படும்,'' என்றனர்.


 

சார்ந்த செய்திகள்