ரூபாய் 4,000 கோடி கடன் மோசடி வழக்கில் சுராணா நிறுவன இயக்குநர்கள் உள்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுராணா குழும நிறுவனங்கள், ஐடிபிஐ வங்கியில் ரூபாய் 4,000 கோடியைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சுராணா நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சுராணா, விஜயராஜ் சுராணா மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நான்கு பேரும் சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 27- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.