தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் இன்று (10/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். அது தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மனுக்களை நேரடியாக அளிப்பதைத் தவிர்த்து தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களைச் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால்/ இணையதளம்/ மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது, ஆகையால், கரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காகக் கூடுவதைத் தவிர்த்து, தபால்/ இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.