விழுப்புரம் நகரை ஒட்டி உள்ள வி. மருதூரைச் சேர்ந்தவர் விஷ்வா. இவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று அப்பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த சவ ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த மணிபாரதி, பிரபா, பிரசாந்த், உட்பட பல வாலிபர்கள் சவ ஊர்வலத்தில் நடனமாடி சென்றனர்.
அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவரும் அவர்களுடன் ஆட்டம் போட்டு சென்றுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அது மோதலாக வெடித்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவ ஊர்வலத்தில் சண்டை ஏன்? என்று அவர்களை சமாதானம் செய்துள்ளார். ஆனால் மணிபாரதி, பிரபா, பிரசாந்த் ஆகிய 3 பேரும் சேர்ந்து சமாதானம் பேச வந்த வெங்கடேஷ் மற்றும் இம்ரான் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில், அவர்கள் இருவருக்கும் வாய் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள், அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுகுறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சவ ஊர்வலத்தில் சண்டை நடந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மணிபாரதி, பிரசாந்த், பிரபா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.