தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி (இன்று) தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கும் 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்துவருகிறது.