Skip to main content

ரேஷன் அரிசி கடத்தல் லாரியை பிடித்தது யார்? 2 டன் அரிசி எங்கே?    

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

Ration rice caught by Arcot police

 

ஆற்காடு நகர காவல்துறையினர் வாகன சோதனையின் போது, லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் 5 1/2  டன் அரிசி அந்த வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆற்காடு நகரக் காவல்நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படையினர் அந்த லாரியில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாழனூர் சத்திரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் பச்சையப்பன்(44). அதே தாழனூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் தமிழரசு இருவரைக் கைது செய்தனர். மேலும், அந்த அரிசியைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், அதில் இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக ஆற்காடு நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

அதேநேரத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி 14-04-2022ந் தேதி காவல் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர்கள் ரமேஷ், முதல் நிலை காவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர் மோகன் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில் ஒரு ஈச்சர் வாகனத்தில் சுமார் 3500 கிலோ  ரேஷன் அரிசியைக் கர்நாடக மாநிலத்திற்குக் கடத்தி செல்ல வந்தது தெரியவந்தது.  இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராணிப்பேட்டை மாவட்டம், தாழனூர் சத்திரத்தை சேர்ந்த தமிழரசன், பச்சையப்பன் என்ற இருவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்கிற செய்தியை வெளியிட்டது. 

 

மேற்கண்ட ரேஷன் அரிசி கடத்திய வண்டியை யார் பிடித்தது எந்த டீம்? இந்த இரண்டு தரப்பும் வெளியிட்ட செய்தியில் எந்த செய்தி உண்மை? நாங்கள் பிடித்து குடிமைப்பொருள் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ஆற்காடு நகர போலீஸார் கூறுகின்றனர். அப்படியாயின் ஆற்காடு நகர போலீஸார் 5 1/2 டன் அரிசியை ஒப்படைத்ததாக அவர்கள் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளனர். ஆனால் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை 3500 கிலோ அரிசி என்று கணக்கு சொல்கிறது, மீதி 2 டன் அரிசி எங்கே போனது எனும் கேள்வி எழுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்