
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்...” என்று கூறுவதாக வசனம் உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டு நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’நானும் இதுபற்றி கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான். பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான். அதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை’’என்று கூறினார்.