திமுகவை சேர்ந்த அப்பாவு, அதிமுக எம்.எல்ஏ இன்பதுரை ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் தற்போது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், 19, 20, 21 சுற்றுகளில் வாக்கு பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றதிற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது.
இன்று காலை 11.30 மணிக்கு மூன்று சுற்றுகளாக இந்த வாக்குகள் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவை சேர்ந்த அப்பாவு, அதிமுக எம்.எல்ஏ இன்பதுரை ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வாக்கு எண்ணிக்கையில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதலில் 19,20 ,21 ஆம் சுற்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.