Skip to main content

இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம்!- அரசு சட்ட பிரிவுகள் மூன்றும் அதிரடியாக ரத்து!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் என அதிரடி தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 


தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின் படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. ரோஸ்டர் முறையில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015- ஆம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.


இந்நிலையில், அதற்கு மாற்றாக 2016 தமிழக அரசு தமிழக அரசு பணியாளர்கள் பணி விதிகள் சட்டத்தை கொண்டு வந்து, Tamilnadu government servants (conditions of service) act 2016, மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்கி வந்தது. தமிழக அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமான உத்தரவு. 

quota Promotion of reservation, grant of work elder is illegal chennai high court


எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘விதிகளுக்குப் புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையை நீதிமன்றம் ஏற்று கொள்ள முடியாது எனக் கூறி தமிழக அரசின் இந்தச் சட்டவிதிகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என தீர்ப்பளித்தனர்.

தமிழக அரசு கையாண்ட இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாகக் கருதப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அது தன்னிச்சையானது, எனவே, அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாகத் தயாரிக்க வேண்டும்  என  உத்தரவிட்டுள்ளனர்.

இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் எனவும், இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி மூப்பு வழங்கிட வகை செய்யும் (Tamilnadu government servants (conditions of service) act 2016 -ல் உள்ள 3 சட்ட பிரிவுகள் 1, 40, 70 ஆகிய மூன்றையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும், பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்