புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேஷ் (35). இவர் கொத்தமங்கலம் வாடி மாநகர் கடை விதியில் தனது தந்தை நடத்தி வந்த ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் கைக் குழந்தை உள்ளனர்.
இவர் இரவு 10.00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல நேற்று (07.01.2020) இரவு கடை முடிந்து வியாபாரம் செய்த பணத்துடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரது வீட்டிற்கு முன்பே சுமார் 500 மீட்டர் தூரத்தில் தயாராக நின்ற மர்ம கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.