கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை. தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் 100க்கும் மேற்ப்பட்டோர் நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், வரும் தீபாவளிக்கான போனஸ் தரப்படவில்லை என்றும், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பல நாட்கள் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு பார்த்தும் எந்த பதிலும் சரிவர அளிக்காத காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இந்த ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான பாக்கி தொகை பல கோடி ரூபாய் தராமல் வைத்துள்ளது. எனவே விவசாயிகளையும் தொழிலாளிகளையும் ஏமாற்றும் இந்த ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.