Skip to main content

மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Public Welfare Workers Union Attention Demonstration!

 

"தகுதி அடிப்படையில் எங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் எங்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் நலன் சார்ந்து அமைந்துள்ள தி.மு.க. அரசு நிறைவேற்றும் என எதிர் பார்க்கிறோம்" என மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10ந் தேதி மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

ஈரோடு மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் நம்மிடம், "முன்னாள் முதல்வர் கலைஞர், 1989ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்தார். 1991ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்ததும் நாங்கள் எல்லோரும் திமுகவினர் எனக் கூறி எங்களைப் பணி நீக்கம் செய்தார். மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. ஆனால் 2001ல் அ.தி.மு.க. "ஜெ" ஆட்சி வந்ததும் தொடர்ந்து எங்களை பணிநீக்கம் செய்தார். மறுபடியும் கலைஞர் தலைமையில் 2006ல் திமுக ஆட்சி வந்ததும் பணி வழங்கப்பட்டது. ஆனால், இரக்கமே இல்லாமல் 2011 "ஜெ" ஆட்சியில் மீண்டும் நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டோம். ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் பணி நியமனம் செய்யப்படுவதும், அ.தி.மு.க ஆட்சி வந்ததும் பணிநீக்கம் செய்யப்படுவதும் எனத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இதை உச்ச நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கால்பந்து போல மக்கள் நலப் பணியாளர்கள் நடத்தப்படுவது நியாயமா என நீதிமன்றம் கூறியது. ஆனால் அதை எதிர்த்து அப்போது அ.தி.மு.க அரசு மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றது. தற்போது மீண்டும் நீதிமன்றம் கல்வித்தகுதி அடிப்படையில் காலிப் பணியிடங்களை மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை இவர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

 

தற்போது தி.மு.க. அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியாளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூபாய் 7500 மட்டும் கிடைக்கும். நாங்கள் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். இதில் தவறு நடந்தால் கூட எங்களால் எதுவும் சுட்டிக் காட்ட முடியாது. 

 

மொத்தம் 13 ஆயிரத்து 500 பேர் ஆரம்ப நிலையில் பணி அமர்த்தப்பட்டோம். அதில் சிலர் இறந்துள்ளனர். தற்போது 11,500 பேர் மட்டுமே உள்ளோம். கடந்த திமுக ஆட்சியின்போது 20% மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி உயர்வு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, 760 பேர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சம்பளம் 36 ஆயிரம். இப்போது குறைந்த சம்பளத்தில் பணி நியமனம் செய்வது வருத்தத்துக்குரியது. பணி நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் எங்களுக்காக வாதாடினார். 

 

தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பலர் உள்ளனர். பட்டப்படிப்பு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.எனப் பலரும் படித்துள்ளார்கள். எனவே எங்களுக்கு நாங்கள் படித்த கல்வித்தகுதி அடிப்படையில், நீதிமன்றம் கூறியபடி அரசு நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் எங்களை பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தித்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும் உச்சநீதிமன்றத்தில் எங்கள் சம்பந்தமாகப் பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.