Skip to main content

ஆடு திருடிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீஸார்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Police arrest two youths for stealing goats

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது கொம்மசமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது செந்தில். இவர் தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதன் மூலம் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கமாக ஆடுகளை மேய்த்து முடித்து மாலை 6 மணி அளவில் தனது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்.

 

மறுநாள் அதிகாலை ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டகையிலிருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு செந்தில் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரது ஆட்டை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனடியாக ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து உதவி ஆய்வாளர் அன்பழகன், அசோக்குமார் மற்றும் போலீசார் இதனை விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுசந்தைக்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.

 

அப்போது 15 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டை மிகவும் குறைவான விலைக்கு இரண்டு இளைஞர்கள் விற்பதற்கு முன்வந்தனர். இதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தனியே அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் காட்டு செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் 20 வயது தினேஷ் அதே ஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் 22 வயது விக்னேஷ் இவர்கள் இருவரும் ஆடுகள் திருடியது தெரியவந்தது.

 

இவர்கள் தான் கொம்ம சமுத்திரம் செந்தில் ஆட்டை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆட்டையும் ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இதில் தினேஷ் என்பவர் கல்லூரியில் பிஏ படித்து வரும் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் போலீஸார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.