கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளின் இருபக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், நெடுஞ்சாலையில் பேருந்துகள் செல்ல முடியாத அளவிற்கும், நகராட்சி சாலைகளில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கும் சாலைகள் குறுகி விட்டதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர் கடந்த மாதம் குளித்தலை கோட்டாட்சியரை நேரில் சந்தித்து குளித்தலை நகர் பகுதி நெடுஞ்சாலை, நகராட்சி சாலைகள், மற்றும் பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதனை அடுத்து கடந்த 6-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ன அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் மூன்று நாட்கள் அவகாசம் கோரியதால் வேண்டுகோளை ஏற்று 9-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். இன்று 9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருந்த நிலையில், பெரிய பாலம் பகுதி திருச்சி - கரூர் நெடுஞ்சாலை கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஏற்கனவே சர்வே மூலம் அளவீடு செய்து குறியீடுகளும் பதியப்பட்டன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை ஆக்கிரமிப்பாளர்களே தானாக முன்வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.