Skip to main content

நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம்;70 பேர் வரை இறந்துள்ளனர்;தோழர்பாலபாரதி குற்றச்சாட்டு

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

திண்டுக்கல் மாநகரில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் மூன்று ரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியில் மக்கள் போய் வருவது கடினமாக இருப்பதால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வருகிறதே தவிர பணியை முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சுற்றி தான் தங்கள் வீடுகளுக்கு போய் வருகிறார்கள்.

 

 

protest

 

இதைக் கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்களை திரட்டி காத்திருக்கும் போராட்டத்தில் குதித்தார்.இந்த காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் பாலபாரதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது... பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலப்பணிகள் துவங்கி 4 ஆண்டுகளாக  70 சதவீதமான பணிகள் நிறைவேறாமல்  அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சகல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

 

 

இந்த மேம்பாலப்பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட மாநில அரசு வழங்கவில்லை. ஆகவே இடம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் பணிகள் நடைபெறாமல் மந்தமாக உள்ளது. ரயில்வே அதிகாரிகள் எங்கள் தரப்பில் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி உள்ளோம். மாநில அரசு தான் இன்னும் பணிகளை நிறைவேற்றாமல் உள்ளது என்று கூறுகிறார்கள். இது போன்ற மாநில அரசு மற்றும் ரயில்வே துறையின் நிர்வாக உள் குழப்பங்களால் போக்குவரத்து இடையூறு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் 70 பேர் வரை இறந்து உள்ளனர்.

 

 

 2 முறை கோட்டாட்சியர் பரிசீலனை செய்து மாற்று வழி தருகிறோம் என்று உத்தரவாதமாக போராட்டங்களின் போது எழுதிக்கொடுத்தார்கள். ஆனால் இதுவரை எந்த மாற்று வழியும் செய்து தரப்படவில்லை. இந்தபிரச்சனையில்  மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகம் ஒரு அடி கூட நகரவில்லை. இதன் காரணமாக காத்திருப்போராட்டத்தை திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் நாங்கள் துவக்கியுள்ளோம். ஆனால் இந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காக காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக மாநில அரசை எதிர்த்து போராடுகிறீர்களே என்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். 

 

 

மத்திய அரசின் ரயில்வே துறை எங்கள் பணியை முடித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய பணத்தை யார் தருவார்கள். அதிகாரிகள் மாறி மாறி பேசினால் நாங்கள் யாரிடம் போய் கோரிக்கை வைத்து பேசுவது. வனத்துறை அமைச்சர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் எப்படி பேசுவாரோ அதை போல ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். 

 

 

அவரை நினைத்தால் இன்னும் கவலையாக உள்ளது. இப்படிப்பட்ட மிக முக்கியமான பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டதற்கு அவரும் ஒரு காரணம் ஆவார். அரசின் இந்த மெத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக திண்டுக்கல் பழனி கேட்டை திறந்து விட வேண்டும் அல்லது மாற்று வழி உடனடியாக செய்துகொடுக்க வேண்டும். நிலம் ஒப்படை செய்தவர்களுக்கு விரைந்த பணம் கொடுக்க வேண்டும். மேலும் இழுத்தடிக்காமல் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.