ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பணிகள் நடைபெறாததைக் கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று காலை ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் திருக்குறளை வாசித்து அதற்கான விளக்கத்தை கூறினார். அதனைத் தொடர்ந்து 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சினை குறித்து பேசினர். பணிகள் சரியாக நடைபெறவில்லை என்றும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டினர்.
அப்போது அதிமுக சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 33 வார்டுகளில் தேர்தலுக்காக புதிதாக தார் சாலைகள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மேற்கு தொகுதியில் தார் சாலைகள், பேட்ஜ் வேலை நடைபெறவில்லை. இங்கு ஊராட்சி கோட்டை குடிநீர் இணைப்பு பணி சரியாக நடைபெறாததால் 50 சதவீதம் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இந்த காரணத்திற்காக வெளிநடப்பு செய்கிறேன்.” என்று கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் மாநகராட்சி எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேலு, ஹேமலதா, பாரதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.