கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் மாமங்கலம் ஊராட்சியிலுள்ள மேல்பாதி கிராமத்திற்கு இதுவரை மயான வசதி இல்லாததால் மாமங்கலம் கொண்டசமுத்திரம் எல்லையில் அமைந்துள்ள ஒரு மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த மயானம் கொண்டசமுத்திரம் ஊராட்சி விராகுடி தெருவிற்கு சொந்தமானதாகும். மாமங்கம் மேல்பாதி தெருவில் அவ்வப்போது யாராவது இறந்து போனால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பில் முடியும். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தனியாக மயானம் அமைவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர், காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் மனுகொடுக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சிமன்ற தலைவர் மதியழகன் கிராமத்திற்கு மயானம் அமைப்பதற்கு முயற்சி எடுத்து உடனடியாக கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்றினார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமங்கலம் எல்லைக்குட்பட்ட செங்கால் ஓடையில் அரசு இடத்தை தேர்வு செய்தனர். பின்னர் அந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிட பணி துவங்குவதற்கு தளவாட பொருட்கள் இறக்கப்பட்டது.
அப்போது அருகில் வயல் வைத்திருக்கும் தனிநபர் அந்த அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் கட்டக் கூடாது என்று தடுத்து வருகிறார். இது சம்பந்தமாக ஊராட்சி மன்றத் தலைவர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு இருந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதி பொதுமக்களுடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடனடியாக அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டு சம்பந்தபட்ட இடத்தில் மயானம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட குழு உறுப்பினர் வெற்றிவீரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் , வட்ட நிர்வாகிகள் காசிராஜன், நமச்சிவாயம் குமார், கே பி குமார் மற்றும் மேல்பாதி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சோழத்தரம் உதவி ஆய்வாளர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதகுறித்து அப்பகுதி மக்கள் செங்கால் ஓடை அரியலூர் மாவட்டத்தில் ஆரம்பித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல கிராமங்கள் வழியாக வீராணம் ஏரியை அடைகிறது. எனவே இதன் மூலம் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவாசயிக்ள் பயன்பெறுகிறார்கள்..எனவே செங்கால் ஓடை ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறகின்றனர் பொதுமக்கள்.