Skip to main content

‘ஒரு நாட்டின் அதிபரான நித்யானந்தாவை எப்படி தொடர்புகொள்வீர்கள்?’ -தள்ளிவைக்கப்பட்ட வழக்கில் மனு தள்ளுபடி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

 

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து  நித்யானந்தா தாக்கல் செய்த மனுவில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால், நித்யானந்தா மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.  இவரைப் பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நித்யானந்தா சில அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து,  நித்யானந்தா மீது கோவை 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

chennai



 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் என் மீது அவதூறு வழக்கை அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்த அவதூறு வழக்கிற்காக கோவை கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை 2014-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், நித்யானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்திருந்தது.
 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர், தன்னுடைய வக்காலத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார். மற்றொரு வழக்கறிஞர் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாகவும் கூறினார்.


 

இதையடுத்து நீதிபதி, கைலாஷ் என்று தனி நாட்டை நித்யானந்தா உருவாக்கி விட்டதாகவும், அவர் அங்கு குடியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை நீதிமன்றமும் தேடி வருகிறது எனச் சுட்டிக்காட்டினார். ஒரு நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?’ என்று நகைப்புடன் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை தள்ளி வைத்தார். 
 

வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 



 

சார்ந்த செய்திகள்