
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து நேற்று (11.10.2024) இரவு 07.44 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதோடு ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. சரக்கு இரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த 19 நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதற்கிடையே தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழு ஒன்று இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இன்று (12.10.2024) காலை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் ஏதேனும் சதித் திட்டம் இருக்குமோ என்ற அடிப்படையில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் பாதை பிரியும் இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் மீண்டும் விசாரணை மேற்கொண்டார். அப்போது ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள தண்டவாளத்தில் உள்ள போல்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விசாரணையில் கடந்த ஜூலை 26ஆம் தேதி, செப்டம்பர் 16 மற்றும் 21 ஆகிய தேதிகள் இதே போன்று தண்டவாளத்தில் இருந்த போல்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.