பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (09/02/2022) நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அத்துடன், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கமலாலயம் மற்றும் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கமலாலயம் சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி என்.ஐ.ஏ. விசாரணை தேவை. பா.ஜ.க. தலைமையகம் மீதான குண்டுவீச்சு சம்பவத்தின் உண்மை பின்னணியைக் கண்டறிய வேண்டும். தடயத்தை காவல்துறை அளித்துள்ளது; சம்பவத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் நீட் தேர்வு ஆதரவு காரணமாக குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவை. காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபருக்கு நீட் என்றால் என்னவென்று தெரியுமா என தெரியவில்லை. காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுக்கதை. குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது; இதனை விரிவாக விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.