
கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து வழக்கு குறித்து விசாரிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோரும் வந்தனர். இவர்களுடன் திமுகவினரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.
நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று காலையில் கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை
சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
பல மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை மருத்துவம பரிசோதனைக்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இதையடுத்து நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்திப்பதற்காக கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோரும் வந்தனர். திமுகவினரும் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.
சிந்தாரிப்பேட்டை காவல் துணை ஆனையர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரை பார்க்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியரை சந்திக்க மு.க.ஸ்டாலின் வரும் தகவல் வந்தது. அதற்குள் நக்கீரன் ஆசிரியரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டதால் மருத்துவமனைக்கு சென்றார் ஸ்டாலின்.
நக்கீரன் ஆசிரியரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், ’’இந்த கைது விவகாரம் நாம் சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆளுநர் சந்திக்க நேரம் ஒதுக்கினால் நக்கீரன் கோபால் குறித்து பேசுவோம். நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்தார்.