Skip to main content

என் மகளுக்கு பிடித்த ஊர் என்பதால் எடுத்தோம்... பாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி!  

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. 

 

fathima



இந்நிலையில் ஐஐடி மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி முன்பு இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் உதவி ஆணையர் சுதாகர் இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது காவல் ஆணையர் விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.  இதனையடுத்து சென்னை வந்துள்ள பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார்.  மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரையும் லத்தீஃப் சந்தித்தார். 

 

 

incident



இந்நிலையில் இன்று பாத்திமாவின் தந்தை லத்தீஃப்பிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லத்தீஃப், என் மகளுக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் அவரை படிப்பதற்காக அங்கு அனுப்பினேன். அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தோம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். இனி ஒரு பாத்திமா இறப்பு தொடரக்கூடாது என வலியுறுத்தினோம். பாத்திமா மரணத்தில் உண்மை வெளிவெரும் என்று நம்புகிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை உறுதியளித்துள்ளது எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்