Skip to main content

பாஜக மீதான தம்பிதுரையின் விமர்சனம் - முரளிதரராவ் விளக்கம்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
ra

 

பாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் பேச்சு அதிமுகவின் பிரச்னை என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

 


கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள இந்திய தொழில் வரத்தக சபையின் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஜவுளித் துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவில் இணைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். 

 

விழாவில், ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளை விளக்கியதுடன், மனுவாகவும் அளித்தனர். அப்போது பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், தொழில் முனைவோர்கள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் என்றும், அதில் தனியார் துறை மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியமானது என்றவர், 2019 தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தயாரிக்கவுள்ள  குறும்படத்திற்காக பாரத் மன்கீ பாத் மோடி கே சாத் நிகழ்ச்சி மூலம்   பல்வேறு துறைகளை சேர்ந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, அருணாச்சலம் முதல் குஜராத் வரையிலான 10 கோடி மக்களிடம் தகவல்களை பெற முனைந்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்காக அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். 

 

பாஜக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் இல்லை என்று காங்கிரசை மறைமுகமாக சாடியவர்,  
மோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், மாநில அரசு மோடி அரசுக்கு துணை நிற்க மாட்டார்கள் என்பதால்  மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் 360 டிகிரி வளர்ச்சி இருக்கும் என்றார்.

 


 பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே  கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை என்றும், மக்களுடன் மோடிக்கான தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளதாக தெரிவித்தார். நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில் பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்றவர், தம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந்து வரவில்லை என்றும், கூட்டணியைப் பொருத்தவரை எந்த கட்சியிடனும் பிரச்னை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,  விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.