Skip to main content

அதிமுக கவுன்சிலர் மீது பண மோசடி புகார்! 

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Money fraud complaint against ADMK councillor!

 

திருச்சி ஆட்சியர் அலுவலக ரோடு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (49). கட்டட ஒப்பந்ததாரரான இவர், திருச்சி மாநகர 54வது வார்டு அ.தி.மு.க. துணை செயலாளராக இருக்கிறார். இவர், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, ​​ஜங்ஷன் பகுதி அதிமுக செயலாளர் நாகநாதபாண்டியின் வற்புறுத்தலின் பேரில் 54வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்சித் தலைமை 52வது வார்டு அதிமுக செயலாளர் கதிரேசனுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 29ந் தேதி நாகநாதர்பாண்டி, சுப்பிரமணி மற்றும் கதிரேசனை ஆகியோரை அழைத்து பேசியுள்ளார்.

 

அப்போது சுப்பிரமணியனிடம் நீங்கள் ரூ.5 லட்சம் பணம், கொடுத்தால் கதிரேசன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என உறுதி அளித்தார். இதனை நம்பிய சுப்பிரமணியன் முதற்கட்டமாக ரூபாய் ஒரு லட்சம் பணத்தை நாகநாதர் பாண்டியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கதிரேசன் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை.

அதைத் தொடர்ந்து சுப்பிரமணியன், நாகநாதர் பாண்டியிடம் சென்று தான் கொடுத்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது நாகநாதர் பாண்டி அவரின் சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதுடன், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட நாகநாதர் பாண்டி மற்றும் கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கூடுதல் மாவட்ட நிதிமன்றத்தில் புகார் மனுதாக்கல் செய்தார். 

 

அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கண்டோன்மெண்ட் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜங்ஷன் பகுதி அதிமுக செயலாளர் நாகநாதர் பாண்டி மற்றும் 54வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் விசாரணை நடத்தி வருகிறார். அதிமுக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் திருச்சி அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்