Skip to main content

சிமெண்ட் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Minister Gold South Statement on Controlling Rise in Cement Prices!

 

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அதன் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (23/10/2021) அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தனியார் சிமெண்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தொழில்துறை அமைச்சர், சிமெண்ட் விலையைக் குறைப்பது தொடர்பாக தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் 14/06/2021 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அக்கூட்டத்தில், தொழில்துறை, சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதனால் கட்டுமான தொழிலுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களை குறிப்பிட்டு, சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15/06/2021 அன்று முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. 

 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 06/10/2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, தற்பொழுது 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சிமெண்ட்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதம் ஆகும். எனவே, சிமெண்ட்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை  எடுத்து வருகின்றது. 

 

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார் சிமெண்ட்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

மேலும், ஓரிரு வாரங்களில், தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் 'வலிமை' என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் 'அரசு' சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் 'வலிமை' சிமெண்ட் முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்-ன் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.