திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தகர குப்பம் மலைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முகாமிட்டிருந்த இரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்க வருவாய் துறை, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தகர குப்பம் பகுதியில் இருந்து ஆத்தூர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் யானைகள் முகாமிட்டன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் யானையை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று யானைகள் இரண்டும் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகவுண்டர் வாழைத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதனைக் கண்ட சின்னகம்பியம்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் லோகேஷ் (28) செல்பி மோகத்தால் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென யானை திரும்பி தும்பிக்கையால் தாக்கியதில் மார்பு பகுதியில் காயமடைந்தார். உடனே காவல்துறையினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் யனையை தொந்தரவு செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கூறி இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் யானையை கண்டவுடன் பின்னாடி ஓடுவது, செல்பி எடுப்பது, கல்லெறிவது உள்ளிட்ட காரியங்களை செய்து வருகின்றனர். இதன் காரணமாக யானையை விரட்டுவதில் சிரமம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.