Skip to main content

மகாவிஷ்ணுவிற்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 07/09/2024 | Edited on 07/09/2024
Mahavishnu court custody order

சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) - 2023 சட்டத்தின் படி192, 196(1)(a), 352, 353(2) ஆகிய 4 பிரிவிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 இன் கீழ் 92(a) என்ற பிரிவிலும் என மொத்தம் 5 பிரிவுகளில் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Mahavishnu court custody order

முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்துப் பேசுகையில், “என்னைப் பொருத்தவரை, ஒரு பிரச்சனை என் கவனத்திற்கு வந்தால் கண்டிப்பாக அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என அதற்கான நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கிச் சென்றுவிடுவேன். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாக மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். தற்போது காவல்துறை வசம் உள்ளார். 

அவர் தவறு செய்தாரா இல்லையா என்பது குறித்து சட்டம் தன் கடமையைச் செய்யும். முதல்வரின் ஆலோசனையின் படி பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக வரையறுக்கக் குழு அமைக்கப்படும். சாதி, மதம் பார்க்காத அமைதியான மாநிலமாக இருக்கும் நிலையில் மூடநம்பிக்கை தூண்டும் விதத்தில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு குடிமகனும் அறிவார்ந்த வகையில் சிந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டமே சொல்கிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்