திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் சாலையில் சென்றவர் பரிதாபமாக பலியானார்.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், ஜல்லி ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி ஒரு டிம்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவாக்குடி காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்தது கரூர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த சரவணன்(27) என்பது தெரியவந்து. மேலும், பலியானவர் திருச்சி தெப்பக்குளம் கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியைச் சேர்ந்த முகமது அலி(57) என்பது தெரியவந்தது. விபத்தில் பலியான முகமது அலியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.