Skip to main content

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு; காவல்துறை விசாரணை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Kavit towel on MGR statue; police investigation

 

மதுரை மாநகர் கேகே நகர் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள எம்ஜிஆர் சிலை கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் சிலை அருகிலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர், ஜெ.பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் இங்கு ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இந்நிலையில் எம்ஜிஆரின் முழு உருவச் சிலையில் இன்று மதியம் மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் எம்ஜிஆர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டை அகற்றினர். இதனையடுத்து காவி துண்டை அணிவித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்  ஏற்கனவே தமிழகத்தில் திருவள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவி சாயம், காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மதுரையில் எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு போடப்பட்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்