Skip to main content

குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது ஏன்?- தனிப்படை தீவிர விசாரணை!

Published on 02/02/2022 | Edited on 03/02/2022

 

kanyakumari incident... police investigation

 

குமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டையைச் சேர்ந்தவர் ஜெப ஷைன். கேரளா வர்க்கலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேல்புறத்தை சேர்ந்த விஜிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இதில் ப்ரியா (2) மற்றும் 6 மாதம் ஆன பெண் குழந்தைகள் இருந்தது. இந்தநிலையில் ஜெபஷைன் வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக ஜெப ஷைன் தாயார் ராஜம்மாள் உடன் இருந்தார்.

 

இந்தநிலையில் 1-ம் தேதி மதியம் விஜி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு வெளியே இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு வீட்டுக்குள் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் தனிப்படை போலீசாாின் விசாரணையில் ஜெபஷைனுக்கும் விஜிக்கும் திருமணம் முடிந்ததும் 3 மாதங்கள் ஜெபஷைன் வேலை பாா்த்து வரும் வர்க்கலையில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். பின்னர் அங்கிருந்து விஜியின் கட்டாயத்தால்  ஊருக்கு வந்து சொந்த வீட்டில் வசித்து வந்தனர். வாரம் தோறும் வீட்டுக்கு வரும் ஜெபஷைன் மனைவியிடம் அன்பாக இருந்து வந்தாராம். மேலும் விஜியுடன் மாமியார் ராஜம்மாள் நல்லா பாசத்தோடு தான் இருந்துள்ளார்.

 

இதற்கிடையில் மாமியார் ராஜம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜியின் தாயார் கடந்த 2 வாரங்களாக மகளின் வீட்டுக்கு வந்து சின்ன சின்ன வேலைகளைச் செய்து விட்டு செல்வாராம். வழக்கம் போல் 1-ம் தேதியும் தாயார் வந்து வேலைகளைச் செய்து விட்டு மதியம் தான் சென்றுள்ளார். அவர் சென்றதும் விஜி உடல் நிலை சரியில்லாமல் இருந்த மாமியாரிடம் வீட்டுக்கு அருகில் இருக்கும் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய அனுப்பியுள்ளார்.  அதேபோல் அவரும் சர்ச்சுக்கு சென்று விட்டார்.

 

அந்த நேரத்தில் தான் விஜி தன்னுடைய தாயாருடன் 45 நிமிடம் செல்போனில் பேசி விட்டு  அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு அவளும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை.

 

அதோபோல் விஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்போனில் தாயாரிடமும் சகஜமாக தான் பேசியதாக அவரின் தாயார் கூறியுள்ளார். மேலும் போனிலும் யாரிடமும் அதிக நேரம் பேசுவது கிடையாதாம். மேலும் குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கணவனிடமும் மோசமான பழக்கவழக்கமோ கடன் தொல்லையோ கிடையாதாம். அப்படியிருக்கையில் எதற்காக இந்த காரியத்தை விஜி செய்தார் என்று போலீசார் செல்போனையும் ஆய்வு செய்து மற்றும் கணவர், மாமியார், தாயார் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்