Skip to main content

கைக்குழந்தையைக் கொன்ற தந்தை! சந்தேகத்தால் நடந்த சோகம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

kanchipuram madurantakam vippedu five month old baby incident

 

காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23). இவரது கணவர் பெயர் மணி என்கிற ரஞ்சித் குமார் (வயது 24). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெப்பேடு கிராமத்தில் வசித்து வரும் இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

கவிபிரியா தனது அத்தை மகனான மணியை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தான் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னரே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் காரணமாக கவிபிரியா கருவுற்றிருந்தார். மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி உள்ளன. கவிபிரியா மீது சந்தேகம் கொண்டு மணி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

 

குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த கவிபிரியாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் குழந்தையுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மணிக்கும் கவிபிரியாவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்படி ஏற்பட்ட தகராறில் மணி கவிபிரியாவை அடித்ததில் அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. அதன் காரணமாக கவிபிரியாவின் பெற்றோர் காஞ்சிபுரம் சென்று அவரை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், இன்று காலை கவிபிரியாவின் வீட்டிற்கு வந்த மணி, அவருக்கு சமாதானம் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு காலை 9 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மணி தனது மனைவியை அடித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் காலைப் பிடித்து சுவரில் அடித்துள்ளார். இதனால் குழந்தையின் பின் தலை மற்றும் முதுகு எலும்பு நொறுங்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மணியை கைது செய்தனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்