வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகை தந்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,
’’காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் எண்ணி திட்டம் தீட்டினார். அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது.
கல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் காமராஜர். ஆனால் இன்று கல்விக்காக தேர்வு எழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிடவேண்டும்.

காமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும். சட்டங்களை திருத்தும் அரசுகளும் செயல்படவேண்டும். அதற்காக எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.

காமராஜர் அவர்கள் இந்த அரிய சாதனையை செய்திடுவதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி மாநில அளவில் இருந்ததே மிக முக்கியமான காரணம். இந்திய நாடு பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு’’ எனப்பேசினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதை கண்டித்து கமலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என இந்து அமைப்பு ஒன்று கமலுக்கு கறுப்பு கொடி காட்டியது. அவர்களை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.