Skip to main content

ஊரெங்கும் இலவச குடிநீர் விநியோகம்... ராமநாதபுரத்தில் கமல்ஹாசன்...?

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

        நாங்களும் களத்தில் தான் இருக்கின்றோம் என்பதனை அறிவிக்கும் விதமாக, 17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவினை வாங்கி குவித்துள்ளது நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம். இதில் கமலஹாசன் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும், கமீலா நாசர் மத்திய சென்னையிலும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், "ஏற்கனவே இங்கு தான் போட்டியிடுவார் என்பதால் தான் முன்கூட்டியே தொகுதியின் முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை கையிலெடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடி நீர் விநியோகம் செய்து வருகின்றோம்." என்கின்றனர் அவரது கட்சியினர்.

 

k

   

பிறந்தது ராமநாதபுரம் என்றாலும், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், " நான் பரமக்குடிக்காரன்." எனக் கூறி பெருமைக் கொள்வார் மக்கள் நீதி மய்யத்தின் கமலஹாசன். ஒரு வருடத்திற்கு முன்பு கட்சியை அறிவிக்கும் நாளன்று பயணத்தை துவக்கியது தொகுதியிலுள்ள ராமேஸ்வரத்தில் தான். அந்தளவிற்கு தொகுதியின் மீதான பற்றுதல் அதிகம் அவருக்கு. இந்நிலையில், 17வது மக்களவைத் தேர்தலில் கட்சிப் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கமலஹாசன் போட்டியிடவேண்டுமென இரட்டை இலக்கத்தில் விருப்பமனுக் கட்டியுள்ளனர் தொகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகள்.

 

k

 

இத்தொகுதியில் கமலஹாசன் வேட்பாளராக களமிறங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அவர்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதோ., " பொதுவாக தண்ணியில்லாக் காடு என்றாலே ராமநாதபுரம் மாவட்டம் தான். இப்பொழுதும் அதே நிலை தான். மாவட்டம் முழுக்க தண்ணீர் தான் பிரச்சனை. கட்சி ஆரம்பிக்கும் போதே உங்கள் ஊரிலுள்ள பிரச்சனைகளைப் பட்டியலிடுங்கள். அதை சரி செய்ய முயலுங்கள் என்றார். அதனை சரி செய்து கொண்டு வருகின்றோம். அதாவது பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடி நீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம். ஏறக்குறைய 6 மாதங்களாக நடந்து வரும் இப்பணி மாவட்டம் முழுமைக்கும் விரிவடைந்துள்ளது. இது வாக்குகளாக மாறும். ஆதலால் கமலஹாசன் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளோம்." என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள்.

இலவச குடிநீர் வாக்குகளை வாங்கித் தருமா.? என்பதனை காலம் பதில் கூறும்..!

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.