Skip to main content

போக்சோ வழக்கு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

 Judge sentences teen to 20 years in prison

 

கரூர் மாவட்டம், பொருந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதியார்(29). இவர் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்த வழக்கானது கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நசீமா பானு, காணொளிக்காட்சி மூலம் தனது தீர்ப்பை வழங்கினார். அதில், சிறுமியைக் கடத்திச் சென்றதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

 

மேலும், இதனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்றார். ஏக காலத்திற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பாரதியார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பாரதியாரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

'சிறை சென்றும் திருந்தவில்லை'- மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
nilgiri incident- the man who was arrested again

புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சோக சம்பவத்தின் வடுக்கள் மறையும் முன்னரே நீலகிரியில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து சிறை தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே அஜித் குமார் என்ற 22 வயது இளைஞர் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த நபர் மனநலம் சரியில்லை என விடுதலை பெற்று வெளியாகி இருந்தார். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் உள்ள ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அஜித்குமார் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதல்  வழக்கை விசாரித்த உதகமண்டலம்-நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து வந்த நபர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.