சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அமைச்சர் க.பாண்டியராஜன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![J. in the campaign. The National Flag on the figurine! Probe on minister Pandiyarajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/jL12NsOTHMiYVUzoXTtIw_mKwgGWXcF5AMQcjZOCgkM/1576606320/sites/default/files/inline-images/Chennai_High_Court%20%282%291111111_3.jpg)
கடந்த 2017- ஆம் ஆண்டு, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார். பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையின் மேல் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த நிலையில், தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
![J. in the campaign. The National Flag on the figurine! Probe on minister Pandiyarajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/E8XG4n3RtUDhZwY-nLtzFxLruA3MmPNdkogAEW5b9wM/1576606335/sites/default/files/inline-images/pon444.jpg)
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (17.12.2019) நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரச்சாரத்தில் அவர் கலந்து கொண்டாரே தவிர பிரச்சாரத்தை அவர் ஏற்பாடு செய்யவில்லை எனவும், இதில் எந்த வகையிலும் அவருக்கு நேரடி தொடர்பில்லை எனவும் வாதிட்டார்.
தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.