Skip to main content

தூத்துக்குடியில் பிடிபட்ட பாகிஸ்தான் துப்பாக்கி, சேட்டிலைட் ஃபோனால் பரபரப்பு!

Published on 26/11/2020 | Edited on 27/11/2020

 

incident in thoothukudi

 

பாகிஸ்தானில் உள்ள உலக தீவிரவாத அமைப்பினர் தங்களின் ஆயுதப் பெருக்கல்களுக்கும் ஆதாயத்திற்காகவும் பணமதிப்புள்ள போதைப் பொருட்களை அங்கிருந்து இலங்கையைச் சேர்ந்த சர்வதேசக் கடத்தல் புள்ளிகளின் மூலமாகக் கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் இந்தியப் பெருங்கடலின் தென்முனைப் பகுதியான இலங்கையை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாக் கடல் வழியை சூட்சமமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

தென்பகுதியின் ஆழ்கடல் பகுதியில் புழங்கிவரும் மீனவர்களின் கூற்றுப்படி, குமரிக் கடல் பகுதியிலிருந்து ராமநாதபுரம் கடற்கரையை ஒட்டிய பல நாட்டிங்கல் மைல் தொலைவு கடலின் ஆழம் குறைவு. சாதாரணப் படகுகள் மின்சாரப் படகுகள் மட்டுமே போய்வரக் கூடிய பூகோள அமைப்பு கொண்ட இப்பகுதியில், பெரிய கப்பல்கள் தரைதட்டி சிக்கிக்கொள்ளும். மீட்பது இரண்டாம் பட்சம்.

 

incident in thoothukudi

 

இந்த அமைப்பை அறிந்த இந்தியக் கடலோரக் காவல் படையான கோஸ்டல் கார்டின் கப்பல்களும், இந்தப் பக்கம் வராமல் தொலைவிலேயே தனது கண்காணிப்பை வைத்துக் கொள்ளும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுதான், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருளை வங்காளவிரிகுடா கடல் ரூட்டில் கடத்தி வருகின்றனர் என்பது தான் கடல்வாழ்க்கையைக் கொண்டவர்களின் தியரி. அதேசமயம் இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியக் கடல் எல்லைப் பகுதிக்குள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டதும் ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் செயற்கைகோள் சிக்னலில் பதிவானதும் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியின் தென்பகுதியின் இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் ஒரு படகு நுழைந்தது தெரியவந்தது. கடலோரக் காவல்படை கப்பலான வைபவ்களின் காவல் படையினர், சேனையா துவா என்ற அந்த இலங்கையைச் சேர்ந்த படகைச் சுற்றி வளைத்துள்ளனர். சோதனையில் அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இருந்தனர். மேலும், அதில் தடை செய்யப்பட்ட துபாயில் தயாரிக்கப்பட்ட துரையா வகை பிரிபெய்டு சேட்டிலைட் ஃபோன்கள் சுமார் 2.50 லட்சம் மதிப்பிலானது சிக்கியிருக்கிறது. தொடர் தீவிர சோதனையில் படகின் கீழ் பகுதியிலுள்ள காலியான  தனிவகை பெட்ரோல் டேங்கைத் திறந்தபோது, அதில் 20 சிறிய பெட்டிகளில் 99 பாக்கெட்களில் தயார் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள், சுமார் 100 கிலோவரை இருந்ததையும் கைப்பற்றிய கடலோரப் படையினர், அதிலிருந்த 5 கைத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். 

 

incident in thoothukudi

 

இலங்கையைச் சேர்ந்த நிகம்புவில் உள்ள அலன்சுகுட்டிகேசின்கா தீப்தா சானி பெர்னாண்டோ என்பவருக்குச் சொந்தமான படகு, சிக்கிய ஹெராயின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் இன்று சென்னையிலுள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கடலோரக் காவல்படையினர் மூலம் தெரியவருகிறது. மேலும் பிடிபட்ட போதைச் சரக்கின் சர்வதேசச் சந்தை மதிப்பு 300 கோடி என்றும், பாகிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவிலுள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல்களிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.