Skip to main content

தஞ்சை தேர் விபத்து: சட்டப்பேரவையில் தமிழக அரசு இரங்கல்  

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

mk stalin

 

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று தொடங்கியது. 

 

விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், இன்று காலை கூடிய சட்டசபையில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நிமிடம் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்