
மின்வாரியத்தின் முழு இழப்பையும் அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதால், அது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு உபயோக நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும், குடிசை வீடுகளுக்கும், விவசாயத்துக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அரசு மின்வாரியங்கள் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இந்த சூழலில், 2021- 2022 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பை 100% அரசே ஏற்கும் என்றும், இதற்காக 13,108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசு 'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 32,000 கோடி ரூபாய் விடுவிக்கும் எனத் தெரிகிறது. இதன்மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை சீராகும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றன.