Skip to main content

அரசு எந்த தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை! -உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 The government never lost a majority! -Government's argument in the High Court!

 

 

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால்தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் தற்போது வரை அரசு அரிதி பெரும்பான்மையுடன் இருப்பதாக, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட  21 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், பெரும்பான்மை குறைவாக இருந்ததால்தான் தி.மு.க.வைச் சேர்ந்த 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறுவது  தவறு.  ஆரம்பம் முதல் இது நாள் வரை அரசு எந்தத் தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை.

 

தற்போதைய நிலையில்கூட, 124 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். பேரவையில் தொடர்ந்து பெரும்பான்மையோடு அரசு செயல்படுகிறது. அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருளை,  சட்டப்பேரவைக்குள்  கொண்டு வந்ததற்காகவே 21 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்கு பரிந்துரைத்ததாக சுட்டிக்காட்டினார்.

 

தொடர்ந்து ஆஜரான தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, உரிமைக்குழு இந்த பிரச்சனை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், முன்கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபையின் கண்ணியத்தை மீறும் வகையில், தடை செய்யப்பட்ட பொருளைக் கொண்டு வந்தது, உரிமை மீறலா இல்லையா என ஆய்வு செய்யவே, சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

இந்த பிரச்சனை, ஏற்கனவே பலமுறை சட்டசபையில் எழுப்பப்பட்டு, அரசு சார்பில் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பதவியை வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார். அவரது வாதம்  முடிவடையாததால், விசாரணை  14-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்