Skip to main content

மதுரையில் கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது குண்டர் சட்டம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Madurai; Gangster Act against youths involved in riots before college

 

மதுரையில் பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

 

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி (30/10/22) மதுரையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் கும்பல் கல்லூரி காவலாளியை எட்டி உதைத்துத் தாக்கியதோடு அங்கு வந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் முத்து நவேஷ், சூர்யா, அருண்பாண்டியன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், அருண் உள்ளிட்ட பலரைக் கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

 

ஆனால், தங்களுக்கு ஜாமீன் வேண்டுமென மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளைஞர்கள் தரப்பிலிருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை நீதிபதி வடமலை விசாரித்தார். அப்பொழுது போலீசார் தரப்பில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைப்பார்கள். மேலும், அவர்கள் கல்லூரி காவலாளியைத் தாக்கியதோடு வாகனத்தைக் கொண்டு அவரைக் கொல்ல முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். மேலும், இதில் சில இளைஞர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி, யாருக்கும் ஜாமீன் கிடையாது என அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 

இவ்வழக்கில் 10 பேர் கைதான நிலையில் சூர்யா, அருண், அருண்பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்