‘காய்ஞ்சி போன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்.
அந்த நதியே காய்ஞ்சி போயிட்டா..
துன்பப்படறவங்க எல்லாம் அந்தக் கவலையை
தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க..
ஆனா.. தெய்வமே கலங்கி நின்னா..
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்?’
-தங்கப்பதக்கம் சினிமாவில் சோதனை மேல் சோதனை பாடலில் வரும் இந்த வரிகளைத் தன் செல்போனில் காலர் ட்யூனாக வைத்திருந்தார் சென்னையைச் சேர்ந்த அந்தக் காக்கி நண்பர். ‘அப்படி என்ன சோதனை?’ என்று அவரிடம் கேட்டபோது, புலம்பித் தீர்த்துவிட்டார்.
“டெய்லி காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சிடுறா. லேண்ட் லைன் போனை அட்டர்ன் பண்ணுனா போதும்.. ஒரே ஆபாச அர்ச்சனைதான். நாம சொல்றத காது கொடுத்து கேட்க மாட்டா. நாங்க போனை கட் பண்ணினாலும், மீண்டும் போன் பண்ணுவா. இப்ப உயிரோடு இருக்கிற அரசியல் தலைவரில் ஆரம்பித்து, செத்துப்போன அத்தனை தலைவர்களையும் ஆபாசமாகப் பேசி அசிங்கப்படுத்திடுவா. இதனால, காலர் ஐடியில அவ நம்பரை பார்த்துட்டோம்னா.. நாங்க போனை எடுக்க மாட்டோம். உடனே உள்ளே இருக்கிற ரூம்ல இருந்து இன்ஸ்பெக்டர் ஐயா, ‘ஏம்பா இத்தனை பேரு இருக்கீங்க.. போனை எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்பார். ‘சார்.. அந்த பொம்பளை..‘ என்று நாங்க சொன்னதும், ‘அப்படியா?’ என்று கேட்டுவிட்டு அமைதியாகி விடுவார்.
அந்தப் பெண் பேசுறது அத்தனையுமே சென்சார் ரகம்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக வீட்டிற்கே போய் சத்தம் போட்டோம். அப்போதுதான் அந்தப் பெண், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. உறவுக்காரங்ககிட்ட அந்த பொம்பளைகிட்ட போனை கொடுக்காதீங்கன்னு சொல்லிட்டு வந்தோம். ஆனா தீர்வு தான் இல்ல. இப்ப எங்களோட கோரிக்கை என்னான்னா, யாராவது அந்தப் பொண்ணுகிட்ட இருந்து செல்போனைப் பிடுங்கி, அதுல இருக்கிற எங்க ஸ்டேஷன் நம்பரை அழிச்சிட்டா போதும். உங்களுக்குப் புண்ணியமா போகும்.” என்று வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார்.
சென்னை இ-3 தேனாம்பேட்டை காவலர்களின் சோதனையை விவரித்த அந்தக் காக்கி நண்பருக்கு நம்மாலும் ஆறுதல் கூறமுடியவில்லை.
ஆபாசமாகப் போனில் பேசி காக்கிகளைக் கலங்கடிக்கும் பெண்!
சார்ந்த செய்திகள்
Next Story
எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.